ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் ஈவிகேஎஸ். இளங்கோவன் அமோக வெற்றி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான. திருமகன் ஈவெரா காலமானதால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஒன்றிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், இதரர் 73 பேர் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தல் பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்

இதையடுத்து, 27ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுயில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்..

இறுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கு இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2ஆம் தேதி) நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் இறுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மொத்தம் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவைவிட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகளும், இதரர்கள் அனைவரும் மொத்தம் 4417 வாக்குகளும் பெற்றுள்ளனர். .

இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் வழங்கினார்.