சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்ற ‘கேமரா மியூசியம்’ திறப்பு விழா!

உலகின் பல இடங்களில் 64-க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்திய பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானவை. ஓவியராக இருந்தாலும் தொடக்ககால கேமராக்கள் முதல் நவீன கேமராக்கள் வரை அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும்  4ஆயிரத்தை தாண்டும்.

தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வந்தார்.

அதன்படி, சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டமில் உலக தரத்தில் முதன்முறையாக மிகவும் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் ஒன்றை நிறுவினார். இந்த அருங்காட்சியத்தை உலக புகைப்பட தினமான இன்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா, 11 கிராம் எடையளவே கொண்ட மிகச் சிறிய கேமரா, முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கின்றன.

புகைப்பட கலையை, அதன் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் விதமாக 3 ஆவண படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் திரையிடப்படுகின்றன. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன்படுத்தியது பற்றிய படமும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்படுகின்றன.

மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம், கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும், புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களுமான பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும், புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.

19-ஆம் நூற்றாண்டு தொடங்கி 21-ஆம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.