விஜயகாந்த் பேசியது இதுதான்! புரிஞ்சவன் புரிஞ்சுக்க! புரியாதவன் சொறிஞ்சுக்க!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த தேமுதிக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அப்போது அவர் அறிவித்தார்.

அவர் மேடையில் என்ன பேசினாரோ, அது அப்படியே கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேச்சு உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலியே!

விஜயகாந்த் பேச்சு:

“அடேங்கப்பா, இது பெரிய மாநாடுதான். எங்கெல்லாமோ மாநாடு போடுறீங்களே, இங்கேயும் போடுங்களேன் என்று கேட்டார்கள். அதான் இங்கு மாநாடு போட்டோம்.

எங்களை எல்லோரும் கூட்டணிக்குக் கூப்பிட்டார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 7 பேர் குழு அமைச்சிருக்கோம் சுதீஷ் தலைமையில். அதில் பொருளாளர் இளங்கோவன், சந்திரகுமார், பார்த்தசாரதி, பேராசிரியர் ரவீந்திரன், வெங்கடேஷ் என 7 பேர் உள்ளனர். 7 பேர் வருதா…? ஆமா, 7 பேர் வருது. இவர்கள்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் போகிறார்கள். நீங்கள்தான் வேட்பாளர்களைக் கொடுக்க வேண்டும். இந்த 7 பேரும் உட்கார்ந்துதான் தேர்வு செய்யப் போகிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கு. தேர்தல் அதிகாரிகள் அதைக் கொடுங்க, இதைக் கொடுங்க என்று கேட்கிறார்கள்.

விஜயகாந்த்துக்குப் பேசத் தெரியாது. உளறிக் கொட்டுறார்னு சொல்றாங்க. என்ன பேசத் தெரியாது? என்ன உளறுகிறேன்? எனது கட்சியை வழி நடத்திச் செல்லவில்லையா? எனக்குத் தெரியும். எனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்.

பத்திரிகைக்காரங்களா எனது தொண்டர்களை வழி நடத்துறாங்க? நான் உங்களைத் தரக் குறைவா சொல்லலை. சீட்டு கூட வாங்குறதுக்காக பேசுறதா சொல்றாங்க. கூட்டணி பத்தி முன்னாடி சொல்லவா, பின்னாடி சொல்லவா? பின்னாடியே சொல்றேன். முன்னாடியே சொன்னா போயிருவாங்க. சொல்லாட்டியும் கூட என்ன செய்ய முடியும்? ஒண்ணும் செய்ய முடியாது. வழக்கம் போல குழப்பிட்டார்னு சொல்வீ்ங்க. எனக்குக் குழப்பமே இல்லை. தெளிவாத்தான் இருக்கேன்.

விவாத மேடைன்னு பேசுறாங்க டிவில. ஜெயலலிதா பத்தி சொல்ல மாட்டாங்க. அதைத்தான் கண்டிக்கிறேன். தவறு என்கிறேன். ஆம்பளை என்றால் தைரியம் வேண்டும். பிரேமலதாகூட சொன்னாங்களே… பயப்படாதீங்க. எனக்கு கோர்வையா பேசத் தெரியாது. உங்ககூட எனக்கு தனிப்பட்ட சண்டை கிடையாது. ஆனா எந்த டிவிக்கும் பேட்டி கொடுப்பதில்லை. பைட் எடுக்காதீங்க. கொடுக்க மாட்டேன்.

எங்கு போகிறார்? திமுக போகிறாரா, பாஜக போகிறாரா என்று கேட்கிறார்கள். நான் எங்கேயும் போகவில்லை. எனது கட்சித் தொண்டர்கள் அழகானவர்கள். அவர்களை வழி நடத்துகிறேன். அவர்கள்தான் இதைக் கேட்க வேண்டு்ம். அவர்களைத் தவிர வேற யாரும் கேட்கக் கூடாது.

(தொண்டர்களைப் பார்த்து) எங்க போகணும்னு நீங்க சொல்லுங்க. பாப்போம். .. என்னது.. உஷ்ஷ்ஷ்ஷ். நான் பேசும்போது யாரும் குறுக்க பேசக் கூடாது. 3 பேர் பிடிக்கும்பாங்க, 3 பேர் பிடிக்காதும்பாங்க.

(தொண்டர்களைப் பார்த்து ‘இருங்க ஒரு நிமிஷம்’ என்று கூறிவிட்டு பிரேமலதாவிடம் பேசுகிறார்) வேகமாக முடிக்கச் சொல்றாங்க. நீங்கெல்லாம் பத்திரமாக வீட்டுக்குப் போகணும். அதனால சீக்கிரமா முடிக்கச் சொல்றாங்க.

அதாவது, நான் தனியாத்தான் இந்த தேர்தலை சந்திக்கப் போகிறேன். யார் யாரோ தேடி வந்தாங்க. வந்தவர்களுக்கெல்லாம் நன்றி. நம்மைத் தேடி வந்தார்கள், இல்லையா? அதனால் நன்றி. எனவே மக்களே, தெளிவாகத்தான் சொல்கிறேன். குழப்பமே இல்லை. தனியாத்தான் சந்திக்கப் போகிறேன்” என்று பேசி முடித்தார் விஜயகாந்த்.