“தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே நடந்தது. இப்போது அதே போன்றதொரு சூழல். என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?.

மக்களாட்சியில் வேர்களாகவும், விழுதுகளாகவும் இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான் என்பார்கள்ا.

ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் முறையாக நடந்ததில்லை. ஒன்று தேர்தலே நடக்காது அல்லது தேர்தல் முறையாக நடக்காது என்பது தான் தமிழகத்தின் கடந்த கால வரலாறு.

1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது, “தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லாத ஒரு வார்டை ‘தாழ்த்தப்பட்டோர் தொகுதி’ என அறிவித்திருக்கிறார்கள்” எனச் சொல்லி தேர்தலை தள்ளி வைக்க கோரியது திமுக. அதன்படி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தவே இல்லை. 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை அதிகாரிகளின் ஆட்சி தான் தொடர்ந்தது.

அதன்பிறகு 1996 முதல் திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், ஆளுங்கட்சியின் தலையீட்டிலேயே தேர்தல் நடந்து வந்தது. தேர்தலின்போது எதிர்கட்சிகள் ஆளுங்கட்சி மீது புகார் தெரிவிப்பதும், வழக்கு தொடுப்பதுமாக தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுக ஆட்சி காலங்களில் 1991, 2011ஆம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல், தற்போது நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

1991ல் தொடர்ந்த வழக்கில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் நடக்காமல் போனது. 2011ல் போடப்பட்ட வழக்கில் “முன்கூட்டியே இது குறித்து அரசிடம் ஏன் முறையிடவில்லை” என கேட்ட நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதனாலோ என்னவோ… இந்த முறை சில மாதங்களுக்கு முன்னரே இது தொடர்பாக பேசத் துவங்கியிருந்தது திமுக. ஆளுநராக ரோசய்யா இருந்தபோது, அதாவது சில மாதங்களுக்கு முன்னரே உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகத் தான், உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் பணிக்கு மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திலும், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

தேர்தலை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. டிசம்பர் 30ம் தேதிக்குள் குளறுபடிகளை சரிசெய்து தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதுر.

மேல்முறையீடு செய்யலாம்… அல்லது நீதிமன்றம் சொன்னபடி குழப்பங்களை தீர்த்துவிட்டு தேர்தலை நடத்தலாம்…

இன்னுமொரு வாய்ப்பும் இருக்கிறது. அது 1991ஆம் ஆண்டை போல தேர்தலையே நடத்தாமல், உள்ளாட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் கையில் விட்டுவிடுவது.

என்ன செய்யப்போகிறது அரசு?

– KUNGUMAM SUNDARARAJAN