அவர்களும் பாவம், என்ன தான் செய்வார்கள்…!

கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம்.

அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் பேசிப் புரிய வைக்க வேண்டிய தேவையில் இருப்பது எவ்வளவு அவமானம் தெரியுமா? இருபது ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் வசதியான விவசாயியாக வரித்துக் கொண்டால் என்ன செய்வது? கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி பழங்கள், காய்கறிகள் எல்லாம் போதுமான நீரில்லாமல் செடியிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி உதிர்கிறவற்றிற்கு சந்தையில் விலை கிடைப்பதில்லை. கிலோ அறுபது ரூபாய் போய்க்கொண்டிருந்த கொய்யா இப்போது 15 ரூபாய்க்கு விலை போனாலே அதிசயம். அதையும் எடுக்க விடுவதில்லை.

தண்ணீர் இருந்தால் தப்பித்து விடலாம்? ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு இடத்தில் போர்வெல் தோண்டும் போது 800 அடியில் தான் தண்ணீர் வருகிறது. 800 அடி தோண்டுவதற்கு ஆகும் செலவு லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது.

இவர்களின் கணக்குப்படி வைத்துக்கொண்டாலும்கூட பதினெட்டு ஏக்கர் வைத்திருக்கிற விவசாயி ஒருத்தர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய நிலத்தில் பதினைந்து போர் போட்டிருக்கிறார். அதில் ஒன்றில் மட்டுமே ஒன்றரை இஞ்ச் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும்கூட அரைமணி நேரம் மட்டுமே ஓடுகிறது. போர் போட வசதி இருப்பவர்களின் நிலை இப்படி இருக்கையில், வசதி இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

அறிவியல் பூர்வமாக அடித்துச் சொல்ல முடியாது என்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியில் போய்க் கேட்டால், அப்படி எங்களால் நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது. ஒரு ரேண்டமாகச் சொல்வோம் அவ்வளவுதான் என்று கை விரிக்கிறார்கள்.

வெறும் ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கிற விவசாயி ஒருத்தர் மனைவி மற்றும் உறவினர் நகைகளை எல்லாம் அடகு வைத்து (நகையிருந்தால் பணக்கார விவசாயி என்று சொல்வது குறித்து பேசுவதில் பயனில்லை) இப்படி பல பேர் சொன்னதைக் கேட்டுக் குத்துமதிப்பாக ஒரு இடத்தில் தோண்டினார். ஆயிரத்து நூறு அடி தோண்டியும் தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் கதை இதுதான்.

போர்வெல் போடுகிறவர்கள் அந்த ஊரில் இப்படி நடந்தது, இந்த ஊரில் இப்படி நடக்கிறது என கதைகதையாய்ச் சொல்கிறார்கள். அத்தனையும் ஆயிரம் அடிக்கு மேல் போயும் தண்ணீர் வராத கண்ணீர்க் கதைகள். இதுதான் உண்மையிலேயே பெரும்பாலான தமிழக விவசாய நிலங்களின் நிலைமை.

தண்ணீரும் இல்லை. தண்ணீர் கொண்டு வர முதலும் இல்லை. முதல் இருந்தாலும் தோண்டினாலும் தண்ணீர் வருமா என்கிற உத்தரவாதமும் இல்லை. பயிர்கள் கருகுகின்றன. இந்த அழிவு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து இனி மீள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை விற்றுத்தான் ஆகவேண்டும். ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்டுவதற்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களும் பாவம் என்னதான் செய்வார்கள்?

அம்மணமாய் ஓடுகிற நிலை ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால், உள்ளுக்குள் எவ்வளவு புழுங்கிக் கொண்டிருப்பார்கள் தெரியுமா? ஒரு பேச்சுக்குச் சொல்வதென்றால்கூட ஆடி கார் வைத்திருப்பவன் அம்மணமாய் ஓடுவதும் அசிங்கம்தானே? ஆடி கார் வைத்திருப்பவர்கள் அப்படி ஓடுவார்களா என்ன? அல்லது ஓட விட்டு விடுவார்களா என்ன?

 SARAVANAN CHANDRAN