பா.ஜ.கவிற்கு வாக்களித்த அனைவரது கைகளிலும் ஒட்டியிருக்கிறது எங்களது விவசாயிகளின் நிர்வாண கண்ணீர்!

ஒரு விவசாயிக்கு உயிர்நாடி அவனது நிலம். தம் நிலம் செத்துக் கொண்டிருப்பதை, அதை மீட்க முயன்று தோற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அத்தனை பேரும் தம் நிலத்தை பிரிந்து தலைநகரில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

28 நாட்கள் ஆகிவிட்டது. என்னென்னவோ செய்து உங்களது கவனத்தை ஈர்க்கப் பார்த்துவிட்டார்கள். உங்களுக்கு பசுக்களை காக்கவும் மனிதர்களை கொல்லவுமே நேரம் சரியாயிருக்கிறது.

எங்கள் விவசாயிகள் என்ன செய்வார்கள்? இழப்பதற்கும் துறப்பதற்கும் அவர்களிடம் என்ன இருக்கிறது? இறுதியாய் அவர்களது ஆடைகளையும் துறந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு உடை அணிந்து பவனி வரும் உங்களை இதெல்லாம் என்ன செய்யும்?

மூடியிருக்கும் உங்கள் காதுகளில் அவர்களது கண்ணீர்க்குரல் விழ இன்னும் எதை இழக்க வேண்டும் அவர்கள்?

அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மட்டுமே திறக்கும் உங்கள் பார்வையில் பட இன்னும் எதை துறக்க வேண்டும் அவர்கள்?

நிர்வாணமாய் நிற்பது, உங்களது போலித்தனமும் கயமையும்தான். விவசாயத்தை காக்கும் பிரதமராய் இருப்பதை விட கார்ப்பரேட் கூலியாய் இருக்கும் உங்களது நிர்வாணம் அது. நீங்கள் வாக்களித்த வளர்ச்சியடைந்த இந்தியாதான் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கிறது. வாழ்த்துகள் பிரதமர் அவர்களே

வயிறு எரிந்து சொல்கிறோம். பா.ஜ.கவிற்கு வாக்களித்த அனைவரது கைகளிலும் ஒட்டியிருக்கிறது, எங்களது விவசாயிகளின் நிர்வாணக் கண்ணீரில் ஒரு துளி…..

SUNDAR RAJAN

POOVULAGIN NANBARGAL