’ஜனநாயகன்’ சட்டவிரோதமாக வெளியான விவகாரம்: உமாசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

’ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட விவகாரத்தில், பிரபல துணிக்கடை மேலாளர் உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக இன்னும் வெளியாகாத நிலையில், சட்ட விரோதமாக இணையதளத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ’ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த பிரபல துணிக்கடை மேலாளர் உமாசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

படத் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று உமாசங்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உமாசங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இவர் துணிக்கடையில் மேலாளரே தவிர சினிமா எடிட்டர் கிடையாது. இதற்காக யாரிடமும் எந்தத் தொகையும் பெறவில்லை” என்றும் கூறி அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர் தான் இந்தப் படத்தை நகலெடுத்து துணிக்கடையில் வேலை பார்க்கும் தன்னுடைய சகோதரருக்கு அனுப்பியுள்ளார். அவர்தான் அந்தப் படத்தை இந்த மனுதாரருக்கு அனுப்பி உள்ளார். மனுதாரர் தான் இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்தார்கள்.

“500 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவருக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று எதிர்தரப்பு வாதம் எடுத்து வைத்தது. நாளொன்றுக்கு 500 பேர் வீதம் 145 நாட்களுக்கு மேல் வேலை பார்த்து உழைப்பில் உருவான படம் வெளியானதால் அவர்களின் உழைப்பு பாழானது என்றும், அதனால் முன்ஜாமின் வழங்கக் கூடாது” என்றும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

அதேபோன்று காவல்துறை தரப்பிலும் சட்டவிரோதமாக வெளியிட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது. அத்துடன் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.

வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.