முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் முதல்வர் ஜோசப் விஜய்: நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ இல்லத்தில்…

அடுத்து, முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திப்பதற்காக, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார். வீட்டு வாசலில் நின்றிருந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

பின்னர் விஜய்க்கு வைகோ பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். விஜய்யும் வைகோவுக்கு பொன்னாடை அணிவித்தார். விஜய்க்கு வைகோ, துரை வைகோ, கட்சியினர் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் அமர்ந்து விஜய் பேசினார்.

வீட்டு வாசலில் குவிந்திருந்த தொண்டர்கள், மக்களை பார்த்து விஜய், வைகோ இருவரும் கைகாட்டினர். பின்னர் வைகோ, கார் வரை சென்று விஜய்யை வழியனுப்பி வைத்தார்.

அன்புமணி, சீமான்…

இதனை தொடர்ந்து, முதல்வர் விஜய், பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியை சந்திப்பதற்காக, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.

விஜய்யை அன்புமணி வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்புமணிக்கு பொன்னாடை அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் விஜய் மரியாதை செய்தார். பதிலுக்கு விஜய்க்கு பொன்னாடை அணிவித்து அன்புமணி வாழ்த்து தெரிவித்தார்.

உடன் இருந்த அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், தருமபுரி தொகுதி எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யும், அன்புமணியும் சிறிது நேரம் உரையாடினர்.

தொடர்ந்து, முதல்வர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திப்பதற்காக, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.

விஜய் வருவதை அறிந்த சீமான், வீட்டு வாசலிலேயே விஜய்க்காக காத்திருந்து, கார் கதவை திறந்து விஜய் இறங்கிய உடனே, விஜய்யை பாசத்துடன் ஆரத்தழுவி வரவேற்று கைபிடித்தபடியே வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்.

சீமானுக்கு பொன்னாடை அணிவித்து விஜய் மரியாதை செய்தார். பதிலுக்கு, விஜய்க்கு பழக்கூடை வழங்கி தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்தார். சிறிது நேரம் சீமானுடன் உரையாடிவிட்டு விஜய் புறப்பட்டு சென்றார்.

முதல்வர் விஜய், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் இந்த அணுகுமுறைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.