29 – விமர்சனம்

நடிப்பு: விது, பிரீத்தி அஸ்ரானி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், கிரன், சிந்து ஷ்யாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, ஆறுமுகவேல், ஷெஹ்னாஸ் ஃபாத்திமா, ச.சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீ வேலன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ரத்னகுமார்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: ஆர் எஸ் சதீஷ்குமார்

இசை: ஷான் ரோல்டன்

கலை: சண்முகராஜ்

ஸ்டண்ட்: டான் அசோக்

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ & ஜி ஸ்குவாட்

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ் & லோகேஷ் கனகராஜ்

தமிழ்நாடு திரையரங்க வெளியீடு: ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா

பிரபல இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோரது தயாரிப்பில், ‘மேயாத மான்’, ‘ஆடை’ போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘29’. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

2010-களில் இப்படக்கதை நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சேலத்தில் வசிப்பவர் நாயகன் சத்யா (விது). வயது 29. பிஎஸ்சி (அக்ரி) படித்தவர். என்றாலும் லட்சியமோ, சரியான வேலையோ இல்லாமலிருப்பவர். இவரது அப்பா (ஆறுமுகவேல்) விவசாயி. அம்மா பாண்டியலட்சுமி (ஆதிரா பாண்டியலட்சுமி) சுற்றுச்சூழல் ஆர்வலர். மகன் சத்யா தன் பேச்சைக் கேட்கவில்லை என்பதால் அவருடன் பல ஆண்டுகள் பேசாமல் இருந்து வருபவர்.

ஊரில் ஆளாளுக்கு குலப்பெருமை, சாதிப்பெருமை, மதப்பெருமை பேசுவதால் எரிச்சலாகி, அடையாள சிக்கலில் தவிக்கும் சத்யா, “நான் யார்” என்ற தேடலுக்கான விடை தேடி, சென்னைக்கு வந்து, ஒரு கம்யூட்டர் கம்பெனியில் வேலைக்கு சேருகிறார்.

அதே கம்பெனியில் புதிதாக வேலையில் சேருகிறார் நாயகி விஜயலட்சுமி என்ற விஜி (பிரீத்தி அஸ்ரானி). தனக்கு விவரம் தெரியாத வயதிலேயே தனது அப்பா ஓடிப்போய் விட்டதால், தனது அம்மாவின் (சிந்து ஷ்யாம்) அரவணைப்பில் வளரும் விஜிக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம்.

தெளிவான லட்சியம் கொண்ட விஜியும், எந்த லட்சியமும் இல்லாத சத்யாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இக்காதல் மூலம் ‘அழகான பெண்ணின் காதலன்’ என்ற அடையாளம் கிடைக்கிறது சத்யாவுக்கு.

இந்த காதலும், காதலியும், இதன் மூலம் கிடைக்கும் அடையாளமும் போதும் என்ற மனநிலையில் இருக்கும் சத்யாவை, வாழ்க்கையில் சாதிக்க வைக்கப் போராடுகிறார் விஜி. ஆனால், அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிய, சத்யாவை விட்டுப் பிரிகிறார்.

தனக்கான அடையாளம் என்று கருதிவந்த காதலும், காதலியும் கைவிட்டுப் போன பின் சத்யா தன்னைத் தானே நொந்துகொள்கிறார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.

சத்யாவின் முயற்சிகள் கைகூடியதா? விஜியின் ஐ.ஏ.எஸ் லட்சியம் என்ன ஆயிற்று? பிரிந்த காதலர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘29’ திரைப்படத்தின் மீதிக்கதை.

’ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது, இந்த ‘29’ படத்தில் நாயகன் சத்யாவாக நடித்திருக்கிறார். தன்னைப் பற்றிய சுய கேள்விகளுக்கு விடை தேடும் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தோற்றத்தில் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் இவர், காதல் காட்சிகளில் அமர்க்களமாக நடித்து, ஸ்கார் செய்திருக்கிறார்.

நாயகி விஜயலட்சுமி என்ற விஜியாக பிரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். லட்சியத்தை நோக்கிய ஓட்டம், காதலினால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் நெருக்கடிகள் போன்றவற்றை நடிப்பில் பக்குவமாகக் கொண்டு வந்திருக்கிறார். மேலும், நடனத்தாலும் கவர்கிறார்.

வில்லத்தனமான கல்லூரி தோழன் சந்தோஷாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். படத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் தோன்றி, தனது அனுபவ நடிப்பால் காட்சிகளுக்குத் தேவையான அழுத்தத்தைத் கொடுத்திருக்கிறார்.

மணியாக வரும் அவினாஷின் நகைச்சுவை ஆங்காங்கே எடுபடுகிறது.

கிரன், சிந்து ஷ்யாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, ஆறுமுகவேல், ஷெஹ்னாஸ் ஃபாத்திமா, ச.சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீ வேலன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நாயகன், தன்னைப் பற்றி தனக்குள் ஓடும் கேள்விகளுக்கு விடை தேடும் பயணமாக இந்தக் கதையைக் காதல், இயல்பான காமெடி மற்றும் சென்டிமென்ட் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 2010களில் இருந்த வாழ்க்கையை அழகாக கண்முன் நிறுத்தும் அளவிற்கு நேர்த்தியாக காட்டியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இளைஞர்களின் வாழ்கை எப்படி இருந்தது என்பதை காட்டிய இயக்குநர், இயற்கை சார்ந்த ஒரு பிரச்சனையையும் அழுத்தமாகப் பேசியிருக்கிறார். பாராட்டுகள்!

ஷான் ரோல்டனின் இசையில் “சீலே சீலே” மற்றும் ”மேன்ஷன் குத்து” பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசை, காட்சிகளின் தன்மைக்கேற்ப பயணித்து படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, ஆர்.எஸ்.சதீஷ்குமாரின் படத்தொகுப்பு, சண்முகராஜாவின் கலை இயக்கம், டான் அசோக்கின் ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘29’ – எமோஷனலான நல்ல படம்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5