“ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்”: தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரது தந்தை பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறையில் ராம்குமாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக திடீரென தகவல்கள் வெளியாகி உள்ளன. இது திட்டமிட்டு சிறையில் நடத்தப்பட்ட கொலை” என்று குற்றம் சாட்டினார்.

சுவாதி கொலை குறித்து தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, ‘இது ஆணவக்கொலை தான்’ என அறிவித்த தமிழச்சி கூறியிருப்பதாவது:

சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல், பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்கப் போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து அதன் ஆபத்தை உணர்ந்துகொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது.

இவ்வாறு தமிழச்சி கூறியுள்ளார்.