சிவலிங்கா – விமர்சனம்

திகிலும், காமெடியும் கலந்த ‘சந்திரமுகி’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் பி.வாசு, தன் இயக்கத்தில் கர்நாடகாவில் பேயோட்டம் ஓடிய கன்னட பேய் படத்தை, தமிழில் மறுஆக்கம் செய்து, தமிழ் ‘சிவலிங்கா’வாக கொடுத்திருக்கிறார்.

ஒரு புறாவை பாசமாக வளர்த்துவரும் சக்திவேல் வாசுவும், அவரது அப்பா சந்தானபாரதியும் அசைவ பிரியாணி செய்யும் மாஸ்டர்கள். சாராவும், அவரது அப்பா ராதாரவியும் சைவ உணவு செய்யும் மாஸ்டர்கள். இந்த இரு குடும்பத்தினரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே சமையல் வேலை செய்வார்கள். இந்த நெருக்கம் காரணமாக, சக்திவேல் வாசுவுக்கும் சாராவுக்கும் இடையே காதல் மலருகிறது. ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பா ராதாரவிக்கு பிடிக்கவில்லை.

சக்திவேல் வாசு ஒருநாள் வேலூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்கிறார். இக்கொலை தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு துப்பு எதுவும் கிடைக்காததால், சக்திவேல் வாசு தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்படுகிறது..

ஆனால், சக்திவேல் வாசுவின் காதலி சாராவோ, இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்க, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.. சிபிசிஐடியில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கும், ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடந்து முடிந்த கையோடு, சக்திவேல் வாசு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ராகவா லாரன்ஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலை வழக்கை விசாரிப்பதற்காக தனது மனைவி ரித்திகா சிங்குடன் வேலூர் சென்று, அங்குள்ள ஒரு பங்களாவில் குடியேறுகிறார் ராகவா லாரன்ஸ். அந்த பங்களாவில் அவ்வவ்போது சில அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த பங்களாவில் திருட வந்த வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக்கொள்கிறார். தான் சிபிசிஐடி போலீஸ் அதிகாரி என்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.

இதற்கிடையே, ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மர்மமான மாற்றங்கள் தெரிகின்றன. இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒரு கட்டத்தில் ரித்திகாவின் உடம்புக்குள், கொலை செய்யப்பட்ட சக்திவேல் வாசுவின் ஆவி புகுந்திருக்கிறது என்பதை லாரன்ஸூம், வடிவேலுவும் தெரிந்துகொள்கிறார்கள்.

தன்னை கொன்றவனை பழிவாங்க துடிக்கிறது சக்திவேல் வாசுவின் ஆவி. அந்த ஆவியின் இந்த விருப்பத்தை நிறைவேற்றினால் தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்பதை உணரும் ராகவா லாரன்ஸ் அதன்பின் என்ன செய்தார்? சக்திவேல் வாசுவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியை ராகவா லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்பது திகிலூட்டும் மீதிக்கதை.

சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக வரும் ராகவா லாரன்ஸ் நடனம், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். காமெடி கலந்த பேய் படங்களில் நடிப்புது அவருக்குத் தான் கைவந்த கலை ஆயிற்றே! பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ரித்திகா சிங், துறுதுறு பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். இந்த படத்தில் புதிய முயற்சியாக புடவையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். அதுபோல், நடனத்திலும் லாரன்ஸுக்கு இணையாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

சக்திவேல் வாசுவை மையப்படுத்திதான் கதையே நகர்கிறது. கிளைமாக்சில் தன்னுடைய வேதனையை சொல்லி இவர் அழும் காட்சி, ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. இப்படம் அவருக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என நம்பலாம்.

வடிவேலு எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக வந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் ‘நான் இன்னும் பழைய ஃபார்மில் இருக்கிறேன்’ என உணர்த்தும் விதமாக உள்ளது. பிரியாணி சாப்பிடும் காட்சியிலும், ‘உருது அதுவா வருது’ என சொல்லும்போதும் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது.

ஊர்வசி, ராதாரவி, ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா, இன்னொரு நாயகியாக வரும் சாரா, பிரதீப் ராவத் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ஷாகிர் ஹூசைனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

மர்ம மரணம், அதற்கு சாட்சியம் சொல்லும் புறா என சரியான ஒரு ஸ்டோரி லைன் பிடித்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில  மாற்றங்கள் கொண்டுவந்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.

சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு கச்சிதம். தமனின் இசையில் ‘ரங்கு ரக்கர’ பாடலும், ‘சிவலிங்கா’ பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை ஓ.கே. ரகம். சுரேஷ் அர்ஸ் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

‘சிவலிங்கா’ – பயந்துகொண்டே சிரிக்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!