தேச துரோக வழக்கில் தாமாக முன்வந்து கைதாகி சிறை சென்றார் வைகோ!

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இதனால் அப்போதைய திமுக ஆட்சியில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ.

தேச துரோக வழக்கை விரைவாக நடத்தவில்லையெனில் தன்னை கைது செய்யக் கோரி இன்று மனு ஒன்றை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அவர். இம்மனு மீது எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வைகோவை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டது.

ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தாமாக முன்வந்து மனுத்தாக்கல் செய்து, கைதாகி, புழல் சிறைக்கு சென்றுள்ளார் வைகோ.