“மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால்…”: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.

அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். ‘அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை’ என்று கூறி, நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்தப்படும் தேதியை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அதே அமர்வில் நடந்த வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ”தேர்வுக் காலமான மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடத்த முடியாது. எனவே, மே 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்தனர்.தேர்தலுக்கான நடைமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கி, ஏப்ரல் 14-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.