செல்வராகவனுடன் கைகோர்த்தது ஏன்?: சந்தானம் விளக்கம்!

உலக மக்கள் அனைவருக்கும்  பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான்.  சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை மன்னனுக்குத் தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழக மக்களின் சிரிப்பிற்கு தற்போதைய சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான  படங்கள் யாவும் தரமான வெற்றியை வணிக ரீதியாகப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக திகழ்வது தான், சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைகோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. ஒருபுறம் நகைச்சுவை மன்னனாக கருதப்படும் சந்தானம், மறுபுறம் தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளியாக கருதப்படும் இயக்குனர் செல்வராகவன். இப்படி ஒரு அற்புதமான கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது.

செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து சந்தானம் கூறுகையில், “பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘அவர் படுசீரியஸான மனிதர்’, ‘அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’ என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும். அதை உணர்ந்ததாலேயே அவருடன் கைகோர்த்துள்ளேன்” என்கிறார்.

தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற படம் ‘யாரடி நீ மோகினி’. ஏ.ஜவஹர் இயக்கியிருந்தபோதிலும், செல்வராகவனின் கதையில் உருவான இந்த திரைப்படம், ஒரு சிறந்த காமெடி – எமோஷன்  களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது.  அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே’ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் – செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என நம்பலாம்.