“இளம் நாயகனுடன் விரைவில் காதல் திருமணம்”: சமந்தா பரபரப்பு பேட்டி!

“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்..

இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி விவரம்:-

யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.

திருமண தேதியை முடிவு செய்து விட்டீர்களா?

அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.

ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக ‘கிசுகிசு’க்கள் வந்துள்ளதே? உண்மையா?

உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?

அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளை மாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும், யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவைவிட்டு விலகி விடுவீர்களா?

சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.

உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?

எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.

நீங்கள் சமூக சேவைப் பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே? அவர் எப்படி?

அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.

இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்க மாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். நானும் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன்.