“ரொம்ப கெட்ட பய சார் இந்த ஆர்.கே.சுரேஷ்…!”

நீங்கள் ‘தாரை தப்பட்டை’ பார்த்திருந்தால்… ‘மருது’ பார்த்திருந்தால்… “இந்த ஆர்.கே.சுரேஷ் ரொம்ப கெட்ட பய சார்” என்று நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்…! அத்தனை கொடூரமான, பயங்கர வில்லனாக நடித்திருப்பார் ஆர்.கே.சுரேஷ். இயக்குனர் பாலா என்ற கொல்லனால் வார்த்தெடுக்கப்பட்டவர் ஆயிற்றே…!

ஒரு நாயகரை அறிமுகம் செய்வது என்பது வேறு, ஒரு நடிகரை உருவாக்குவது என்பது  வேறு. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை  உருவாக்குவதில்  முன்னோடி என்றே சொல்லலாம். அவர் உருவாக்கிய  நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற

அடைமொழியைத் தாண்டி கதாபாத்திரங்களாகவே மாறும் தன்மையை கொண்டு இருப்பார்கள். விக்ரம், சூர்யா, அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்த பட்டியலில் தற்போது ‘தாரை தம்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, ‘மருது’ படத்தில் வில்லனாக வந்து கலக்கும் ஆர் கே சுரேஷும் இணைகிறார்.

குறைந்த காலகட்டத்தில் சிறந்த தயாரிப்பு  நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த சுரேஷ், நடிப்பின் மேல் உள்ள தனது காதலால், இன்று எல்லோரும் மெச்சும் பயங்கர வில்லன் நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.

நம்பியார், பி.எஸ்.வீரப்பா முதல் ரகுவரன், பிரகாஷ் ராஜ் வரை திறமையான வில்லன் நடிகர்களை வரவேற்றுள்ள தமிழ் திரைப்பட உலகம், இவருக்கும் தரை தம்பட்டையுடன் ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. சமீபகாலமாக நமது  நேட்டிவிட்டிக்கு பொருந்தாத வட  இந்திய வில்லன்களைப் பார்த்து சலித்துப் போயிருக்கும்  தமிழ்  ரசிகர்கள், ஆக்ரோஷமான  நடிப்பை வெளிப்படுத்தும் தனக்கு   கொடுக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்துபோய் இருக்கிறார் சுரேஷ்.

”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்கு பொறுப்பும் கொடுத்திருக்கிறது என்று தான்  சொல்லுவேன். இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசியும் தான் காரணம் என்பேன். நான் ஒரு  இயக்குனரின் நடிகனாகத் தான்  இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ்நாள்  முழுக்க கடமைப்பட்டு இருக்கிறேன்” என்று தன முறுக்கு  மீசையை  தடவியபடி  கூறினார் ஆர் கே சுரேஷ்.