‘தரமணி’ படத்துக்கு நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்: ரஜினிகாந்த் வெளியிட்டார்!

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தரமணி’. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the Bottom of Our Hearts’ என்னும் காணொளியை உருவாக்கி, அதை யூ ட்யூபில் ‘தரமணி’ படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சிறிது நேரத்திலேயே, இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது.

யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில் உருவாகி இருக்கும்  ‘தரமணி’ பாடல்களை இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இப்பாடல்களை இயக்குநர் ராமும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்தனர்.

இயக்குநர் ராம் கூறுகையில், “தரமணி’ படத்தின் பாடல்களை  ரஜினி சார் வெளியிட்டிருப்பது எங்களுக்கு உற்சாகம் ஊட்டி இருக்கிறது . அதே சமயத்தில், மறைந்த என்னுடைய நண்பர் நா.முத்துக்குமாரை நினைத்து என் உள்ளம் வருந்துகிறது. 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதி, இரண்டு தேசிய விருதுகளை பெற்று, தமிழ் திரையுலகில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த  பாடலாசிரியராக  திகழ்ந்தவர் நா முத்துக்குமார்.  அவருடைய எழுத்துக்களுக்கு என்றுமே முற்றுப்புள்ளி இருக்காது” என்றார்.

யுவன்ஷங்கர் ராஜா கூறுகையில்,  “என்னுடைய இசைப் பயணத்தில் மிக முக்கிய மைல் கல்லாக இருந்தது, நா முத்துக்குமாரின் பாடல் வரிகள். இந்த ‘தரமணி’ பாடல்களை எங்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு சமர்ப்பணம் செய்கிறோம்” என்றார்.