‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’: இது பாடல் அல்ல; படம்!

பிக் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கோவை ரவிச்சந்திரன்  தயாரிக்கும் புதிய திரைப்படத்துக்கு, எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் இடம்பெற்று, இன்றும் பிரபலமாக இருக்கும் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்த ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன்(!) அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாளப் படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரையும் தமிழ்திரைக்கு  பிக் பிலிம் இண்டர்நேஷனல் அறிமுகப்படுத்துகிறது. இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் அழகுராஜ். படம் பற்றி அவர் கூறுகையில், “காதலும் காமெடியும் கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது.  சின்னத்திரையில் மிக பிரபலமான நிகழ்ச்சி ‘நாளைய இயக்குனர்’ தொடர். அந்த நிகழ்ச்சியின் போட்டிகளில் பங்கேற்ற இயக்குனர்கள் பலர், திரைப்படங்கள் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியின் இயக்குனரான நான் (அழகுராஜ்) இயக்கும் முதல் படம் தான் இந்த ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்

இசை – லியாண்டர் லீ

கலை – மகி

ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்

நடனம் – சௌமியா

தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம்

இணை தயாரிப்பு – எம். செந்தில் பாலசுப்ரமணியம்

ஊடகத்தொடர்பு – மௌனம்ரவி