சொல்வதெல்லாம் உண்மை’யில் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

‘பொதுவெளியில் உங்கள் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்’ என்ற பொருள் தரும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. “உங்கள் சொந்தப் பிரச்சனையை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்; பகிரங்கப் பேசி அசிங்கப்படாதீர்கள்” என்று எச்சரிப்பது தான் இப்பழமொழியின் நோக்கம்.

ஆனால் இது தெரியாமலோ, அல்லது தனிப்பட்ட முறையில் பேசி தீர்க்க முடியாமல் போனதாலோ, பாதிக்கப்பட்டோர் பகிரங்கமாக பேசுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. பெரும்பாலும் அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தட்டு குடும்பத்தினரே பங்கேற்று அசிங்கப்படும் இந்நிகழ்ச்சியை முதலில் செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி நடத்தி பிரபலப்படுத்தினார்.

அவருக்குப்பின் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் ““என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று சீரியசாக சொன்ன வாக்கியம், முதலில் விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியிலும், பின்னர் சமூகவலைத்தளங்களிலும் கிண்டல் செய்யப்பட்டு, அதன்பின்னர் சினிமாவிலும், தி.மு.க. தேர்தல் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டு, இன்று தமிழர் வாழும் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமாக இருக்கிறது.

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த ஜூன் மாதம் விலகினார். அவருக்குப்பின் நடிகை சுதா சந்திரன் இந்நிகழ்ச்சியை நடத்திவந்தார்.

தற்போது சுதா சந்திரனுக்குப் பதிலாக லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் நடத்துனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.