நெருப்புடா – விமர்சனம்

நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று, தீயை அணைத்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

தீயணைப்பு தேர்வுக்கு முன் தினம், விக்ரம்பிரபுவின் நண்பரில் ஒருவரான வருணிடம், அந்த பகுதியின் ரவுடியான வின்சென்ட் அசோகன் வம்புக்கு இழுக்க, அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார். இதில் எதிர்பாராத விதமாக வின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார்.

இதிலிருந்து விடுபட விக்ரம்பிரபு மற்றும் நண்பர்கள் ஏரியா கவுன்சிலர் மொட்டை ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார்கள். இறந்தவர் ஊரிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனின் நண்பர் என்று அனைவருக்கும் தெரியவருகிறது. இதையறிந்த மொட்டை ராஜேந்திரன் உதவி செய்ய மறுக்கிறார்.

வின்சென்ட் அசோகன் இறப்புக்கு காரணமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் விக்ரம் பிரபு, மதுசூதனன் நம்மை தேடி வருவதற்கு முன், நாம் மதுசூதனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், விக்ரம்பிரபு மற்றும் நண்பர்களில் ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும் மதுசூதனன், விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டு செல்கிறார்.

இறுதியில், மதுசூதனனிடம் இருந்து விக்ரம்பிரபும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

தீயணைப்பு வீரர் ஆகி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருக்கும் கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. ரவுடியுடன் முறைப்பது, நிக்கி கல்ராணியுடன் காதல் செய்வது என நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். விக்ரம்பிரபு-நிக்கி கல்ராணி ஜோடிப்பொருத்தம் சூப்பர்.

மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் நிக்கி கல்ராணி, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வழக்கம்போல் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் மதுசூதனன். அப்பா பாசத்தை உணர்த்தும் விதமாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் பொன்வண்ணன். மொட்டை ராஜேந்திரனின் காமெடி ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் வருண். மற்ற நண்பர்களும் அவரவர் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு தீயணைப்பு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் குமார். காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்க முடியாத அளவிற்கு படம் செல்கிறது. யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ் கொடுத்திருப்பது சிறப்பு.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘நெருப்புடா’ சிறப்புடா.