‘நிபுணன்’: “போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையையும் சொல்லும் க்ரைம் த்ரில்லர்!” – பிரசன்னா

பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இதுபோல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து  நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா.

அர்ஜுனுடன் பிரசன்னா இணைந்து நடித்திருக்கும் படம் ‘நிபுணன்’. ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள இப்படம் அர்ஜுனின் 150-வது படமாகும்.

அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன், வரலக்ஷ்மி  சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘நிபுணன்’ குறித்து பிரசன்னா பேசுகையில், ”இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் எனது  நீண்ட நாள் நண்பர். ‘நிபுணன்’ ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. ‘நிபுணன்’ படத்தின் திரைக்கதையையும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்குனர் அமைத்துள்ளார்.

நான் இப்படத்தில் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளேன். ஒரு வழக்கமான புலனாய்வு போலீஸ் கதாபாத்திரம் அல்ல என்னுடையது.

அர்ஜுன் சாருடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். 150  படங்கள் நடித்த பின்னரும், அவரது ஸ்டைலும், அவர் தன் உடற்கட்டை பராமரிக்கும் விதமும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்திகிறது. ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக வரலக்ஷ்மி சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையையும் இப்படத்தில் மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம். இப்படத்தின் எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும்  கடுமையாக உழைத்துள்ளனர். இந்த படமும் எனது கதாபாத்திரமும் மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் என நம்புகிறேன்” என்றார் பிரசன்னா