”மாம்பழம்” ஏலம் போனது: ஏலம் எடுத்தவர்கள் மோடி – எடப்பாடி!

வரும் மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அஙகம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தனர்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் பாமக தலைவர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் வந்தனர். முதல்வர் சால்வை அணிவித்து அவர்களை  வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. இன்றைய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி, பாமக 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும். மேலும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும். பாமகவுக்கு எந்தெந்த நாடாளுமன்ற தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்த்தை விரும்பாத நெட்டிசன்கள், “மாம்பழம் ஏலம் போய்விட்ட்து. மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் ஏலம் எடுத்துள்ளார்கள்” என்கிற ரீதியில் காட்டமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். பா.ம.க.வின் தேர்தல் சின்னம் மாம்பழம் என்பதும், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. சேர பல நூறு கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்றொரு அதிகாரபூர்வமற்ற தகவல் உலா வருகிறது என்பதும் குறிப்பிட்த்தக்கது.