“விஷமிகளை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விரட்டுங்கள்”: ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்! 

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`. மருத்துவ உலகின்  மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி.

இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக `ஒளடதம்`  பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். திரையரங்குகளில் பேனா தரும்போது` “தமிழா, தமிழில் கையெழுத்திடு” என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு .

இதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட  பேனா வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப்பட்டது.

o9

இவ்விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இது நல்ல விஷயம். அதேபோல  அவரிடம் நான் கற்றுக்கொண்ட நல்ல விஷயம், தெரிந்தவர்களிடம் பேசும்போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும்போது பெயரை உச்சரிக்கும்போது அன்பு  கூடுகிறது. நெருக்கமும்  வெளிப்படும்.

இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சியைத் தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான்  ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது .தமிழ் மொழியை கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது .

இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம், தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள்  என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த  இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார் பேரரசு.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து  போடுவேன் . காசோலைகளிலும் கூடத் தமிழில் தான்  கையெழுத்து  போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து  போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா?

நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத்  தேடிப் பிடிகக வேண்டும் .நான் அங்கு போயிருந்தபோது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது.

அண்மையில ஒரு தெலுங்குப் படத்தின்  படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப் போனபோது அங்கு  அவர்களுக்கு  ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது.  என்  பாஸ்போர்ட்டில  சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்.. .

சில நாடுகளில ஆங்கிலம் தெரிந்தாலும் அம்மொழியில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார் பாக்யராஜ் பேசினார்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும்போது, ,” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதையை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்திலுள்ள மூலப்பொருள்கள் தவறானவை என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

நாம் சாப்பிடும்  உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன  இது பற்றிய விழிப்புணர்வு இங்கு   இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட்க்ள் படமெடுத்துள்ளோம். படத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன.

ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப்  படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது  அவ்வளவு சிரமமாக இருக்கிறது.  எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ,  பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ  ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். .அதைக்காட்டி ‘உங்கள் படத்தை வெளியிட நான் உதவுகிறேன்’ என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும்.

தமிழில் ‘ஒளடதம்’ பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, சேலம் திரையரங்குகளில் வழங்க உள்ளோம். இதுவும் ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சி செய்வதில் எங்களுக்கு சந்தோஷம்” என்றார் நாயகனும், படத்தின் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு.

இவ்விழாவில் படத்தின் நாயகி சமீரா,.நடிகர் விஷ்ணுபிரியன் , படத்தின் வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி.சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் ஆகியோரும்  கலந்துகொண்டு பேசினர்.