“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்!” – நாஞ்சில் சம்பத்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக் கூடியதே!’ எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது .கேள்விகளால் வேள்வி செய்யும் ரங்கராஜ் பாண்டே நெறியாளராக இருந்தார் .

இப்படி ஒரு தலைப்பை இந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சி, குறிப்பாக பாண்டே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதை திசைகளின் காதுகளுக்கு இவர்களுக்கு சொல்லி வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

நானும் ஒரு அதிமுக பிரச்சாரகன் எனும் முறையில் கலந்து கொள்ளவில்லை, நான் ஒரு மான உணர்வுள்ள மனிதன் என்ற நிலையில் தான் கலந்து கொண்டேன்.

ஆதிக்கத்திற்கு எதிராகவும், அக்கிரமங்களுக்கு எதிராகவும் எந்த நிலையிலும் குரல் கொடுத்து வந்து இருக்கிறேன். ஒரு 30 ஆண்டு கால மேடை அனுபவத்தில், நேற்று நான் சந்தித்த அனுபவம் என்னை நிலை குலையச் செய்துவிட்டது

அறிவார்ந்த தளத்தில் நின்று சுப .உதயகுமார் கணைகளை வீசியபொழுது, ரஜினி ரசிகர்கள் காட்டுமிராண்டிகளை போல, கற்கால மனிதர்களை போல நடந்து கொண்டார்கள்.

“இப்படி நடக்க வேண்டாம்” என்று பாண்டே கேட்டுக்கொண்டும், இயக்குநர் அமீர், “உதயகுமார், பேச்சை நிறுத்துங்கள்” என்று அவரை உட்கார வைத்த பிறகும், ரஜினி ரசிகர்களின் அநாகரிகம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

வேல்கம்பும், வெட்டரிவாளும், ஆசிட்பல்பும், சோடாபாட்டில்களும் வீசப்பட்ட மேடைகளில் கூட நான் துணிந்து நின்று பேசியிருக்கிறேன். வத்தலகுண்டும், குளித்தலையும், பொழிச்சலூரும் அதற்கு சாட்சிகள். ஆனால்அருவறுக்கத்தக்க வகையில், நாகரிக கேடாக, நாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் தான் ரஜினி ரசிகர்கள் என்பதை நேற்று அறிந்து கொண்டேன்.

இவர்கள் அரசியலுக்கு வந்தால் நந்தவனத்துக்குள் நாய் நுழைந்துவிடும், கரும்பு தோட்டத்தில் காட்டெருமை புகுந்துவிடும், நாகரிகம் தனக்கு தானே தற்கொலை செய்துகொள்ளும், பண்பாடு பாடையில் ஏற்றப்படும், இந்த கொள்ளை சிலந்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தமிழர்களின் கடமை என்று சொல்வது என் கடமை. மடமையை சாய்ப்பதற்கான அந்த வேள்வியில் நான் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டியவனாக இருக்கிறேன்.

பொதுவாக தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. குரைக்கிற நாய்கள் கடிப்பதில்லை. நாய் கடிக்கிறதா என்பதை போகப் போக பார்த்து கொள்ளலாம்.

நேற்று அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை…

(நாஞ்சில் சம்பத் முகநூல் பதிவு)