“சமூக முரண்பாடுகளை பேசும் படங்களை மக்கள் வரவேற்கிறார்கள்!” – பா.ரஞ்சித்

“இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஓடினாலும், ‘காக்கா முட்டை’, ‘ஜோக்கர்’ மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகின்றன” என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.

‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குனர் கீரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும், கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர். இவர்களுடன் தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம்புலி ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்தபாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

m2

அப்போது பேசிய இயக்குனர் ரஞ்சித், “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப் போடும். ‘பராசக்தி’யில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஓடினாலும், ‘காக்கா முட்டை’, ‘ஜோக்கர்’ மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகின்றன.

“மெர்லின்’ படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடலை பார்த்தேன். பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய் படங்களை காட்டிலும் மெர்லின் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குனர் வசந்தபாலன், “நண்பன் நா.முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன் சிங்கம்புலியின்  பேச்சு  என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான காலகட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒருதலை காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர்கள் தங்கர்பச்சான்,  மகிழ் திருமேனி உட்பட அனைவரும் “மெர்லின்’ ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு இப்படத்தின் டீஸரும், ப்ரோமோ பாடலும் சான்றாக அமைந்துள்ளன” என்று பாராட்டு தெரிவித்தனர்.