கதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ!

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மயங்கி விழுந்தார்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் சார்பில் பேரணியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதற்குப் பிறகு மேடையில் ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ பேசுவதற்காக மைக் அருகில் வந்தபோது மயங்கிய நிலையில் சரிந்து விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது ஓய்வுக்குப் பிறகு வைகோ மேடையில் பேசினார். ஒரு கி.மீ. தூரம் நடந்துவந்த களைப்பின் காரணமாகவே வைகோ மேடையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.