லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: ப.சிதம்பரம் மகன் சென்னையில் கைது!

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடு திரட்டுவதற்கு ‘அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்’ தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் உதவி செய்ததாகவும், இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ மற்றும்  அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

 இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர், முன்ஜாமீன் வழங்கக் கோரி கார்த்திக் சிதம்பரம் தாக்கல்  செய்த மனுவை மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர் இன்று மாலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என தெரிகிறது.