கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம்: தி.மு.க. அழைப்பை ஏற்றார் அமித் ஷா!

மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வருகிற (30ஆம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேரில் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதால், அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.