“ரஜினியின் ‘காலா’ பட வெளியீட்டை தடுக்க சதி”: கலைப்புலி எஸ்.தாணு குற்றச்சாட்டு!

‘கபாலி’ பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி.செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு விளக்கமளித்தார்.

“ஜி.பி.செல்வகுமாருக்கும், ‘கபாலி’ படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. செல்வகுமார் ‘கபாலி’ படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையெழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார் .அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் கபாலி படத்தை வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இது வரை, ரூ 61 லட்சம்  அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் அவருக்கு நான்  உதவியிருக்கிறேன்.

‘கபாலி’ படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். ‘கபாலி’ மாபெரும் வெற்றி படம். சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தயாரிப்பாளரான நானே சொல்கிறேன் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை  கேட்டு உதவி செய்வது ரஜினியின் பழக்கம். அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத் தான்  தான் ‘கபாலி’ நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.

தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி, ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்த சதி செய்கிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்” என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.