“இந்தியாவை தவிர்த்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ்மொழி இருக்கிறது!”

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ்மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன்,  தமிழ் ஆராய்ச்சியாளர்  ஒரிசா பாலு, நடிகர்  ராதாரவி, கவிஞர்  பிறைசூடன், கவிஞர்  சினேகன், டி.பி.கஜேந்திரன், வ.உ.சி பேரன் முத்து குமாரசாமி, ‘செம்மொழி சேலை’ நெய்து தேசிய விருது பெற்ற  ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும்,  ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடன இயக்குனர் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும்   கலந்துகொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறைசூடன், “நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலை வணங்கியதில்லை. அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை.  பிற மொழிகள் தமிழர்களை வாழ வைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆள வைக்கும்” என்றார்.

அடுத்து பேசிய சினேகன், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்)  தமிழன் என்ற தலை கனத்தோடு இருக்கிறீர்கள். இல்லை என்றால், இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக  சம்பாதித்து இருக்கலாம். ஆனால்  தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகனம் கொள்வோம்”  என்றவர், “இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்றார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், “வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை ‘டாடி, மம்மி’ என்று அழைக்கும் ஆங்கில கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும், “எனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் எனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரை கேட்ட  அனைவரும் ‘திமுககாரர்களா நீங்கள்’ என்று கேட்டார்கள்” என்றார்.

ஒரிசா பாலு பேசுகையில், “இந்தியாவை தவிர்த்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ் மொழி, அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது நாம் தான் மறந்து விட்டோம்” என்றார் ஆதங்கமாக.

தமிழ் மொழிக்காக இப்படி ஒரு  ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணனை அனைவரும் பாராட்டினர். “தமிழுக்காக செலவு செய்வது, என் பெற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு”  என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.