“என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது”: விஷால் பேச்சு!

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் விஷால், ஆர்யா, டி.சிவா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இசையை வெளியிட்டார்கள்.

விழாவில் விஷால் பேசியது: “உன்னோட படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கே போக மாட்டியே.. நீ எப்படி? என ஆர்யா கேட்டான். அப்போது “இன்னும் 2 வருடத்துக்கு திரையுலகம் இப்படித் தான் இயங்கப் போகிறது. நாம் சம்பந்தப்படாத படமாக இருந்தாலும், அதையும் விளம்பரப்படுத்துவது தான் எங்களுடைய நோக்கம் என்று சொன்னேன்.

‘ஜெயிக்கிற குதிர’ தலைப்பே அருமையாக உள்ளது. ஷக்தி சிதம்பரம் சார் தொடர்ச்சியாக படம் தயாரிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். எஸ்.ஏ.சி, தேனப்பன், டி.சிவா அனைவருமே நண்பர்கள் தான். அனைவருக்குமே சொல்லிக் கொள்வது ஒன்று தான். என்னை எவ்வளவு திட்டினாலும், கோபமே வராது. ஏனென்றால் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறேன்.

‘கைது செய். கைது செய். விஷாலை கைது செய்’ என்ற செய்தியைப் பார்த்துவிட்டு எனது அம்மா – அப்பா இருவருமே ”சூப்பர் காமெடிடா இது” என காமெடி சேனல் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் இந்த மாதிரி விஷயங்களைத் தான் ரசித்துப் பார்ப்பார்கள்.

நல்லது செய்தால் இவ்வளவு தடைகள் வருமா என்பதை கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பார்த்துவிட்டேன். மேலும், அந்த தேர்தலில் ராதாரவியை பார்த்துவிட்டேன். அதைத் தாண்டி எனக்கு போட்டியே இல்லை.

நடிகர் சங்கத்தில் நாங்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையுமே நிறைவேற்றிவிட்டோம். ஒரே ஒரு வாக்குறுதிக்கான அறிவிப்பு மட்டும் அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளோம்.

என்னை வளர்த்த திரையுலகம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என இளைஞர்கள் வந்துள்ளோம்” என்றார் விஷால்.

விஷால், டி.சிவா, ஏ.எல்.அழகப்பன் மூவருமே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வெவ்வேறு அணியினராக இருந்தபோதிலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.