“ஜெ. மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது!” – உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால நீதிபதிகள், இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சிபிஐ உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தங்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அதிமுக தொண்டன். தற்போதும் அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார்.

இந்நிலையில் திடீரென டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கிறார்.

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இது போன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.

டிசம்பர் 5ஆம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்?. எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? என அவரது மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப் பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுபோல மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பத்திரமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.

மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் பல முரண்பாடுகள் உள்ளன”என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசுவாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. சரியான சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகத்தான் அவர் இறக்க நேரிட்டது.

இதே காரணத்திற்காக டிராபிக் ராமசாமி மற்றும் பிரவீணா என்பவர் தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மதனகோபாலராவ், “தேவைப்பட்டால் இந்த மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க கால அவகாசம் தேவை” என்றார்.

நீதிபதிகள் கேள்வி:

அதற்கு நீதிபதிகள், ‘‘ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்க மாநில அரசு முற்றிலுமாக தவறி விட்டது. மத்திய அரசும் அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள், ஏன் ஆளுநரைக்கூட தனது பிரதிநிதிகளாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிந்து கொண்டது. ஆனால் ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மத்திய அரசும் மக்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது. இதுவரை அமைதி காத்துவிட்டு இப்போது பதிலளிக்க மத்திய அரசு முன்வருகிறது.

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை தெரிவிக்காததில் இருந்தே பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. மனுதாரர் அதிமுக உறுப்பினர். அவர் தனது கட்சித் தலைவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக மரணத்தில் சந்தேகம் எழுவது இயல்பான ஒன்று தான் என்றாலும் அதைப் போக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் எங்களுக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ரத்த உறவினரான அவரது அண்ணன் மகள் தீபா இதுவரை நீதிமன்றத்தை அணுகாதது ஏன் என தெரியவில்லை.

ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்தால் தான் உண்மைகள் வெளியே வருமா?. அப்படியென்றால் உண்மைகள் வெளியே வர அவரது உடலை ஏன் தோண்டியெடுக்க உத்தரவிடக் கூடாது?. மேலும் மனுதாரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மரணம் குறித்து அறிய கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைத்தது போல, ஜெயலலிதாவின் மரணத்தை அறிய 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்க கோரியுள்ளார். இந்த மனுவை நிராகரிக்க முடியாது’’ என கருத்து தெரிவித்தனர்.

அதன்பிறகு நீதிபதிகள், இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற விவாகரத்துறை, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டசபை செயலாளர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் ஆணையர், அப்போலோ மருத்துவமனை தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை வரும் ஜனவரி 9-க்கு தள்ளி வைத்தனர்.