“நயன்தாரா இருக்கும்போது ஒரு மேஜிக் நிகழும்”: விக்ரம் பேச்சு!

‘அரிமா நம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.  இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசியது:

எனக்கு நேற்றிரவு 3 மணி ஆனாலும்  இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை. பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் இதற்கு காரணம்.

என் ஒவ்வொரு படம் செய்யும்போது அது ரசிகர்களாகிய உங்களுக்கு பிடிக்குமா என்று பார்த்துதான் செய்வேன். அப்படித்தான் என் ஒவ்வொரு படத்தையும், கதையையும் அணுகுவேன். படம் பேச வேண்டும்; இந்த படம் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது ரசிகர்களாகிய உங்களுக்குப் பிடிக்கும்.

நான் மட்டுமல்ல, ஆனந்த் சங்கரும் இந்த படத்துக்காக 9 மாதங்கள் காத்திருந்தார். இந்தக் கதை ஓகே ஆனபிறகு வேறொரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. அது தர்மமல்ல என்று எனக்காக காத்திருந்தார்.

நான் இதில் முதன்முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். அந்த பாத்திரத்தை வேறொருவர் செய்வதாக இருந்தது. ஏன்… நாமே செய்தால் என்ன என்று தோன்றியது. நடித்தேன்.

ஆனந்த் சங்கர் இளைஞர்தான். வயதில் சின்னவர்தான் ஆனால் முதிர்ச்சியோடு செயல்படுபவர்.

தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் துணிச்சல்காரர். நயன்தாரா, நித்யா மேனன் போன்றோரை நடிக்க வைத்து படத்தை பெரிதாக்கி விட்டார். ஹரியை வைத்து ‘சாமி2’  படத்தை அவரே தயாரிக்கவும் தயாராகிவிடடார்.

ஹரரிஸ் ஜெயராஜ் எனக்கு எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அந்த ‘மூங்கில் காடுகளே’ எனக்குப் பிடித்த ஒன்று. இன்றும் அது என் போனில் ஒலிக்கிறது. இதில் பாடல்களை அருமையாக கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அருமை.

இதில் நான் நடிக்கும் இரண்டாவது பாத்திரத்தின் பெயர் ‘லவ்’ என்பது. அதற்கும் ஹாரிஸ் நன்றாக இசையமைத்துள்ளார்.

ஆர்.டி.டிராஜசேகர் ‘பீமா’ வைப் போலவே இதிலும் தன் ஒளிப்பதிவில் என்னை அழகாகக் காட்டியுள்ளார்.

படத்தின் முக்கால்வாசி  கதை மலேசியா, தாய்லாந்தில் நடக்கிறது. ஆனால் எல்லாமும் அங்கு எடுக்க முடியாது. கலை இயக்குநர் சுரேஷ் மலேசியா, தாய்லாந்து போலவே  செட்களை இங்கேயே போட்டு  பிரமிக்க வைத்தார்.

நயன்தாரா பிரேமில் இருக்கும்போது ஒரு மேஜிக் நிகழும். இதிலும் அந்த ஹெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.. நித்யாமேனன் அந்த பாத்திரத்துக்குள் புகுந்து வாழ்ந்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு எல்லாரும் பெரிய ‘ஓ’ போடுங்கள்.. அவர் இன்னமும் பெரிய ஆளாக வருவார். அவர் ‘ரெமோ’ வில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. நான் ரெமோ என்பது கடந்த காலம் ,இனி சிவாதான் ரெமோ. நான் செய்தது ஊறுகாய் மாதிரி. அவர் பிரியாணியே போடுவார்.

இங்கே நிவின்பாலி  வந்ததற்கு நன்றி அவரது ‘பிரேமம்’ பார்த்து பைத்தியமாக ஆனேன் நான்.

இவ்வாறு விக்ரம் பேசினார்.

விழாவில் ஹரி இயக்கத்தில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்  விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ புதிய படத்தின்  அறிவிப்பு இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

விழாவில் ‘இருமுகன்’  படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், நிவின் பாலி, தம்பி ராமையா, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை  ரித்விகா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், பாடலாசிரியர்கள் தாமரை, மதன் கார்க்கி,ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு, இயக்குநர் ஹரி  ஆகியோரும்  கலந்துகொண்டு பேசினார்கள். நிறைவாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் நன்றி கூறினார்.