முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை: முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது.

இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் தரப்பு கூறுகையில், “உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம்.

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார்.

தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில்  வெளியிடப்பட இருக்கிறது. ஒரு பிரபல தென்னிந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து இப்படத்திற்காக பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இதை பற்றிய அதிகார அறிவிப்பு வெகு விரைவில் வெளியிட உள்ளோம்” என்றது.

இப்படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில்,”எனது வாழ்க்கைக் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில்  நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம். விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன் . நான் இந்த படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்” என்றார்.

இப்படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையை கூறும் இப்படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தமிழ்  விளையாட்டு வீரர்களின் ஒரு சின்னமாக திகழும் முத்தையா முரளிதரன், உலகெங்கும் தன் திறமையை நிரூபித்துள்ளார். முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது.  இந்த சவாலை நான் ஆவலோடு எதிர்கொள்ள  காத்திருக்கிறேன். முரளியே எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார் என்பதை அறிந்தும், அவரே எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார் என்பதை அறிந்தும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் முரளிக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.