“கள்ளக்காதல்” மாரிமுத்துவும், “பப்பி ஷேம்” பாஜகவும்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

காவல்துறை வந்து பார்த்தபோது, பிணத்தின் வாயில் துணி திணிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு அட்டையில் 1,2,3,4,5 என எண்கள் எழுதப்பட்டு, அதில் 3-ம் எண் அடிக்கப்பட்டிருந்தது. அதாவது, மாரிமுத்து மூன்றாவது பலி; மேலும் சில பலிகள் இருக்கும் என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாம்.

முக்கியமாக, பிணத்துக்கு பக்கத்திலேயே மோடியின் படம் ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. ஒரு தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.

காவி கும்பலுக்கு இது போதுமே. உடனடியாக திருப்பூரில் ஒரு கலவர நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக இருந்த அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள் – ஜல்லிக்கட்டு பின்னுக்குப் போய் டெல்லிக்கட்டு முன்னுக்கு வந்திருந்த நாட்கள் அவை. தமிழ்ச் சமூகத்தின் மேல் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்தை வலிந்து திணிக்கும் இந்துத்துவ செயல்திட்டத்தை ‘ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு’ என்கிற குறியீட்டின் மூலம் தமிழர்கள் எதிர்த்தார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் எழுந்த பேரெழுச்சி இயல்பாகவே இந்துத்துவ எதிர்ப்புடன் கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நிலையில், அதை மதரீதியில் பிளவுபடுத்த ஹெச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் தலைமையில் இந்துத்துவ கும்பல் படாதபாடு பட்டது. என்றாலும் அவர்களின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிந்த தமிழ் மக்கள், அந்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் எள்ளி நகையாடினர்.

படம் ஒன்றை பகிர்ந்த ஹெச்.ராஜா, இசுலாமியர்கள் பின்லேடன் படம் அச்சிட்ட இருசக்கர வாகனத்தில் வந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கொளுத்திப் போட்டார். சமூக வலைத்தள மக்களோ, அந்தப் படம் மெரினா போராட்டத்தில் எடுக்கப்பட்டதில்லை என்று நிரூபித்தார்கள்.

பாரதிய ஜனதா மதக் கலவரங்களைத் தின்று வளரும் கட்சியென்பதும், அது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி பரந்துபட்ட மக்களுக்கே எதிரானது என்றும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்த நிலையில் தான் மாரிமுத்து ‘வீரமரணம்’ அடைகிறார்.

0இந்தப் பின்புலத்தில் இந்துத்துவ கும்பல் மாரிமுத்துவின் பிணத்தைக் காட்டி கலவரத்தைத் தூண்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் அத்தனையும் கருவிலேயே சிதைந்து போயின. இதற்கிடையே, விசாரணையைத் துவக்கியிருந்த போலீசாருக்கு, மாரிமுத்து மரணமும், அவரது பிணம் கிடந்த இடத்தைச் சுற்றி தூவி விடப்பட்டிருந்த ‘தடயங்களும்’ தங்களது என்கவுண்டர் திரைக்கதைகளை விட ஏராளமான பொத்தல்களோடு இருப்பது உறுத்தியிருக்க வேண்டும்.

ஒருவனைக் கொன்றதோடு, சிரமப்பட்டு மரத்தில் ஏறி, கயிறு கட்டி, தூக்கில் தொங்குவது போல் செட்டப் செய்வதைக் கூட புரிந்துகொள்ள முடியும் – ஆனால், வேலை மெனக்கெட்டு அட்டையில் நெம்பர்களை எழுதுவதும், எங்கிருந்தோ மோடியின் படத்தைப் பீறாய்ந்து வந்து அதற்கு செருப்பு மாலை போட்டு (பிய்ந்த செருப்புகளை எத்தனை பேர், எத்தனை இடங்களில் தேடியிருக்க வேண்டும்?), தேசியக் கொடியை தலைகீழாக வேறு பறக்க விட்டுச் செல்வதென்றால் – வந்தவர்கள் கொலைகாரர்களா அல்லது சங்க பரிவாரத்திற்கு திரைக்கதை எழுதும் அறிஞர் பெருமக்களா?

இந்த அடிப்படை சந்தேகங்களெல்லாம் எலியளவு மூளை இருந்தால் எழுந்திருக்கும் – பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை என்பதால், மாரிமுத்துவின் சாவுச் செய்தி கேட்டதும் இசுலாமிய “தீவிரவாதிகளுக்கும்” “தேசவிரோத சக்திகளுக்கும்” எதிராக கம்பு சுற்றத் துவங்கி விட்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்த செய்தி வந்துள்ளது. முதலில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர் போலீசார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக் காதல் தற்கொலையை மூடி மறைப்பதோடு, கூடவே மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைய பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும், பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கப் போகிறது என வதந்தி பரப்பிவிட்டதும் தெரியவந்தது.

இதற்கிடையே, தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்பூர் பகுதியில் கலவரம் நடக்காத நிலையில், ‘வீரமரணம்’ அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பொன்னார்ஜி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக்கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார் என கமலாலயம் பகுதியில் வட்டமடித்துக்கொண்டிருந்த கழுகார் வாட்சப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

சென்ற வாரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சண்முகநாதனின் அந்தப்புர லீலைகள் வெளியாக, நாடே நாறியது – அதற்குள் ஒரு கள்ளக்காதல் தற்கொலையும், அதைக் கொலையாக மாற்றி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தமிழக காவிகளின் இன்னொரு முயற்சியும் அம்பலமாகியுள்ளது.

ஆனாலும் ஒரு விசயத்தை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும். கள்ளக்காதல் தெரிய வந்ததால் ஊருக்கும், உறவுக்கும் பிரச்சினை என்று முடிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். அப்படி தெரிந்தாலும் “நான் யோக்கியன்” என்று சங்கராச்சாரி, நித்யானந்தன் போல மூடர்களை நம்ப வைக்க முடியும் என்பதோடு, அந்த நம்பிக்கைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும் மோடி எனும் இந்துத்துவா செக்யூரிட்டி சர்வீஸ் இருப்பதால் சண்முகநாதன் தற்கொலை செய்யவில்லையோ என்னமோ!

Courtesy: vinavu.com