தினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை!

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், ”கழகத்தில் சசிகலாவைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு சரியானதே. இதை நாங்கள் சில மாதங்களுக்கு முன்பே கூறினோம். இது தாமதமான முடிவு தான். ஆனால் விவேகமானது” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஆதரித்து ஏகப்பட்ட கமெண்டுகள் போடப்பட்டு வருகின்றன.

இதில், ஜெயந்த்தின் கருத்துக்கு எதிராக இளவரசி மகன் விவேக் ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார். அந்த கமெண்ட்டில் “நடப்பவை கழகத்தின் நன்மைக்கானவை அல்ல. மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும்” என காட்டமாக கூறியிருக்கிறார்.

ஜெயந்த் மற்றும் விவேக் பதிவுகளை முன்னிட்டு, அவற்றுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேஸ்புக்கில் கனஜோராய் நடக்கிறது கருத்துச் சண்டை!