சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது தெலுங்கு அணி!

ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில் அசோக் செல்வன் 1 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய விஷ்ணு 16, சாந்தனு 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். விக்ராந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 64 பந்துக்களில் 100 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை ரைனோஸ் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து தெலுங்கு வாரியர்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தெலுங்கு வாரியர்ஸ் அணியினர் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 168 ரன்கள் எடுத்து சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.