மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்கை எய்தினார்

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவால் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இயற்கை எய்தினார்.

கவிஞர், பேராசிரியர், பொதுவுடமைச் சிந்தனையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர் இன்குலாப். இவரின் இயற்பெயர் சாகுல் அமீது. ‘புரட்சி’ என்ற பொருள்தரும் ‘இன்குலாப்’ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே இவரது படைப்புகள் இருக்கும்.

சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த இன்குலாப் ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஏராளமான கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ‘ஒவ்வொரு புல்லாய்’ எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் ‘ஆனால்’ எனும் நூலாகவும், நாடகங்கள் ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘குரல்கள்’ எனும் தொகுதிகளாகவும், கதைகளும் குறுநாவலும் ‘பாலையில் ஒரு சுனை’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பதிவு செய்யும் விதமாக ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என்ற மேடைப் பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். அந்தப் பாடல் இன்றளவும் தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது.

ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் கண்டித்து 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தமிழக அரசிடமே திருப்பி அளித்தவர் இன்குலாப். சிற்பி இலக்கிய விருது, வைரமுத்து விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்குலாப் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்குலாப் இயற்கை எய்தினார்.