வெள்ள நிவாரண பணிகளில் போலீசார்: கமல்ஹாசன் பாராட்டு!

வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பல இடங்களில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சியில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனே நேரடியாக களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதால், ஏனைய உயர் அதிகாரிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுறுசுறுப்பாக உதவி வருகிறார்கள்.

வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை, போலீஸாரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டரில், தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு தலைமையில் போலீஸார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் படத்தைப் போட்டு, பதிவிட்டிருப்பதாவது:

அழைப்புக்கு அப்பாற்பட்டு கடமையாற்ற வந்ததற்கு மிக்க நன்றி. நல்ல குடிமகனின் அழகு சீருடை இல்லாமலோ அல்லது சீருடையுடனோ கடமை செய்து நிரூபிப்பதுதான். இதே போன்று அதிக அளவில் தமிழர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற முன் வர வேண்டும்.

இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.