ஜெயலலிதாவை எதிர்க்கும் வசந்திதேவிக்கு சூர்யாவின் ‘அகரம்’ மாணவர்கள் ஆதரவு!

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோதிரம் சின்னத்தில் பிரபல கல்வியாளர் வசந்திதேவி போட்டியிடுகிறார். அவருக்கு ஏராளமான கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’ மாணவர்கள், வசந்திதேவியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

அதுபோல், மதுரை சட்டக்கல்லூரி மாணவியும் மதுவிலக்கு போராளியுமான நந்தினி, வசந்திதேவிக்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பதோடு, அவரோடு சேர்ந்து, மோதிரம் சின்னத்துக்கு  வீடு வீடாக வாக்கு சேகரித்தும் வருகிறார்.

0a2v

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி, 50க்கும் மேற்பட்ட முறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, ஜெயலலிதா எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக கல்வியாளர் வசந்திதேவி களம் இறங்கியிருப்பதால், போட்டியிடும் தனது முடிவை மாற்றிக்கொண்ட நந்தினி, வசந்திதேவிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.