டபுள் ஆக்குபன்ஸி – விமர்சனம்

நடிப்பு: சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர்

இயக்கம்: அஸ்வின் கந்தசாமி

ஒளிப்பதிவு: சாந்தகுமார் சக்கரவர்த்தி

படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி

இசை: சாம் சி.எஸ்

தயாரிப்பு: ஏ.சி.எஸ். அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பு சுந்தர் (அவ்னி மூவிஸ்)

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

ஒரு ஊரில் ஒரு கணவன் (போஸ் வெங்கட்) – ஒரு மனைவி (வினோதினி வைத்தியநாதன்). இவர்கள் பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத கணவன், ஒருநாள் வானத்தைப் பார்த்து கைகூப்பி கடவுளை வணங்கி உருக்கமாக வேண்டுகிறார். அவரது மனைவிக்கு கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது.

ஆனால், பிறந்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்து போகவே, கணவன் மீண்டும் கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது ஒளிக்கீற்று ஒன்று குழந்தையின் மீது படுகிறது. உடனே குழந்தை உயிர் பெறுகிறது. ஆனால், குழந்தை பெண்ணாக மாறி இருக்கிறது. இந்த பாலின மாற்றம் ஆச்சரியமாகவும், விந்தையாகவும் இருந்தாலும் குழந்தை உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் கணவனும், மனைவியும் இருக்கிறார்கள்.

பின்னர்தான் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த குழந்தை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் இருக்கும் என்ற விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறது. இந்த விஷயத்தை வேறு யாரிடமும் கூறாமல், குழந்தைக்கு ரஜினி என பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். இப்படியாக, பகலில் ’பெண்ரஜினி’யாகவும் (ரேஷ்மா வெங்கடேஷ்), இரவில் ’ஆண்ரஜினி’யாகவும் (சந்தோஷ்) வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.

ஒருநாள் விபத்தில் கணவனும், மனைவியும் இறந்துவிட, அவர்களின் இறுதிச் சடங்கை பெண்ரஜினி செய்து முடித்துவிடுகிறார். இது இரவில் ஆண்ரஜினிக்கு தெரிய வர, அவர் பெண்ரஜினி மீது கடுங்கோபம் கொள்கிறார். ஏற்கெனவே பரஸ்பரம் வெறுப்புடன் இருக்கும் இருவரும் மேலும் வெறுப்புக் கொள்கிறார்கள்.

அதன்பிறகு ரஜினி சென்னைக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் எப்படி வாழ்கிறார்? காதல், தொழில், ஏக்கம் என அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் முன்னணி கதாபாத்திரமான ரஜினி பாத்திரத்தில் ஆணாக சந்தோஷும், பெண்ணாக ரேஷ்மா வெங்கடேஷும் நடித்திருக்கின்றனர்.

தனக்கு ஏற்படும் பாலின மாறுபாடு பிரச்சனையிலிருந்து அறிவியல்பூர்வமாக எப்படி விடுபடுவது எனத் தான் படித்த ‘ஜெனிடிக்ஸ்’ துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது, காதலனிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிப்பது, தன் சக உயிரான ஆண்ரஜினிக்காகவும் அக்கறைப்படுவது எனக் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் பெண்ரஜினியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ்.

பாரில் வேலை செய்யும் ஆண்ரஜினியாக வரும் சந்தோஷ் சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், தன் சக உயிரைப் புரிந்துகொள்கிற காட்சி எனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆண்ரஜினியின் காதலி ப்ரியாவாக நடித்திருக்கும் சம்யுக்தா விஸ்வநாதன், பெண்ரஜினியின் காதலன் கார்த்திக்காக வரும் வினோத் கிஷன் இருவரும் தேவையான நடிப்பை ரசிக்கத்தக்க விதத்தில் வழங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் தவிர விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. கொஞ்ச நஞ்சமல்ல… நிறையவே சிக்கலான கதையை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமான காட்சிகளைக் கொண்டு அடுக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. “லாஜிக் கிலோ என்ன விலை?” என்று படம் நெடுக கேட்டிருந்தாலும், படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றதற்காக அவரை பாராட்டலாம்!

சாம் சி.எஸ்ஸின் இசை, சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘டபுள் ஆக்குபன்ஸி’ – முழுக்க முழுக்க வித்தியாசமான படம் விரும்புவோர் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5