“பாரம் தாங்க முடிந்தவர் தான் மென்மேலும் உயர முடியும்”:  விஜய் சேதுபதி உருக்கம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் ‘96’. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம்  வெளியாவதற்குமுன் பெரிய எதிர்பார்ப்பையும், வெளியானபின் பெரிய வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம் குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முகசுந்தரம்,  மகேந்திரன் தேவராஜ், நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீகார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

n5

இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “தொழில்முறை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என நான் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து வைத்து வாழ்ந்ததில்லை. இரண்டும் ஒன்றாகக் கலந்த வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு சினிமா தான் வாழ்க்கை. இந்த படத்தில் பணியாற்றிய பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள். நண்பர்களுக்கு நன்றி சொல்லக் கூடாது என்பார்கள். அதனால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கப் போவதில்லை.

ஊடகவியலாளர்களுக்கும் நான் நன்றி சொல்லப் போவதில்லை. ஏனெனில் நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றிக்கு உங்களின் (ஊடகவியலாளர்களின்) வழிகாட்டல் தான் காரணம். அதனால் தான் அந்தப்படம் ஒரு மாதம் கழித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அன்று முதல் நீங்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க இயலாத உறவாகிவிட்டீர்கள்.

நான் நன்றி சொல்ல விரும்புவது, படத்தில் இடம் பெற்றிருப்பது போல், இயற்கைக்கு மட்டும் தான்.

இந்த படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித்குமார் ஆகிய இரண்டு நண்பர்கள் தான் காப்பாற்றினார்கள். இதையும் கடந்து இந்த படத்தின் அடையளமாக இருப்பவர்கள் விஜய் சேதுபதியும், திரிஷாவும் தான். இவர்கள் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள்” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும்  அழகியலுடன் சொல்லும் படம் அது.

பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்குச் சொந்தமான படைப்பு தான் ‘96’. ஆனால் அதனை பார்க்கும் அனைவரையும் தங்களுக்கு சொந்தமான படமாக அது நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம் இது.

நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுக்கோலாக வைத்துத் தான் இதனை பேசுகிறேன்” என்றார்.

பின்னர், ’96’ பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுத்திய பணத் தட்டுப்பாடு குறித்தும், அப்பணச் சுமையை விஜய் சேதுபதியே ஏற்க முன் வந்ததால் தான் படம் திரைக்கு வரமுடிந்தது என்று கூறப்படுவது பற்றியும் பேசிய விஜய் சேதுபதி, “இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார் மீதும் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இது யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம், எது இறுதி என்று கண்டுபிடிப்பது எப்படி கஷ்டமோ, அதுபோல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.

அதனால் இவ்விசயம் தொடர்பாக யார் மீதும் பழி சுமத்த நான் விரும்பவில்லை. யாரும் இதற்குப் பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயம் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம்.

வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும்போது நான் அடுத்த கட்டத்திற்குப் போகப் போகிறேன் என நினைத்துக்கொள்வேன். ஏனெனில், யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயர முடியும். என்னுடைய வாழ்க்கையில் பல முறை இப்படி பல சம்பவங்களைக் கடந்து வந்திருக்கிறேன்” என்றார்.

 

Read previous post:
n6
’96’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்…

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் '96'. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு

Close