“சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ வர வேண்டும்”: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் –ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்தப் பாராட்டுக்களை பெற்றுவரும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா ஆகியோருடன் கண்டு களித்தார்.

0a1b

இப்படத்தைப் பார்த்தபின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் மாரிசெல்வராஜையும் ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். “தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார். பல வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்த படம் இது. திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஸ்டாலின்.

பின்னர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில், அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.