ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி தயாரிக்கும் படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’

“ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல?” என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த கேள்வியை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசையமைப்பாளரும் பாடகருமான ஏ.ஆர்.ரெஹானா, ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார். அவர்  இப்படத்தின் மூலம் முதல்முறையாக திரைப்பட தயாரிப்பு  துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது நண்பர்களான சுபா, வாசுகி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் வி.விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் அசார் மற்றும்  ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலி கான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி, விஜய் டிவி அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரெஹானா,  படத்தொகுப்பாளராக பிரேம் குமார் (குற்றம் கடிதல்), ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன், கலை இயக்குனராக முருகன் (கெத்து, மான் கராத்தே), நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர், பாடகர்களாக அபே, சைந்தவி ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

“தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். என்ன அந்த பிரச்சனை? அதில் இருந்து எப்படி அவர் தப்பிக்கிறார்? என்பது தான்  படத்தின் ஒரு வரிக்கதை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமா  இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகளாக இருக்கும். அதுதான் இப்படத்தின் தனித்துவமான சிறப்பு” என்று கூறுகிறார் இதன் இயக்குனர் வி.விக்னேஷ் கார்த்திக்.

“இது முழுக்க முழுக்க பாண்டஸி – காமெடி திரைப்படம். கதாநாயகன் அசார் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும், கதாபாத்திரத்திற்கான அர்ப்பணிப்பும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்து இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் உடனே கற்று கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இந்த படத்தின் சில குறிப்பிட்ட காட்சித் தொகுப்பை பார்த்த எங்களுக்கு சிரித்து சிரித்து வயிறே வலித்துவிட்டது. இந்த திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கும் அதே நிலைமை தான் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா.