‘கபாலி’யை காதலிப்பதற்கான காரணங்கள்!

* பிரமாண்ட ஷங்கரின் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் கூட காணக் கிடைக்காத ரஜினியின் தூய நடிப்பு. எத்தனை எத்தனை இடங்களில்! (இதற்கு முன்பு ரஜினியின் ‘தளபதி’ படத்தின் ஒரு ஸ்டில் தான், பெட்டி கடை, டீ கடை, மெக்கானிக் ஷாப், ஸ்டிக்கர் ஷாப், போர்டு வரையும் கடை – என்று அதிகளவில் வரைந்து உபயோகப்படுத்தினார்கள். அதை ‘கபாலி’ படத்தின் ஸ்டில்ஸ் முறியடிக்கும். ஒரே படத்தில் எத்தனை எத்தனை அற்புத ஸ்டில்கள். சாவடி!)

* ராதிகா ஆப்தேயின் நடிப்பு. பல்லை காட்டாமல் சிரிக்கும் அந்த சிரிப்பு. கூடவே சேர்ந்து சிரிக்கும் அந்த கண்கள். அப்புறம், சென்னையிலிருந்து மலேசியாவுக்கு திரும்பி, விமானத்திலிருந்து இறங்கி வரும் சமயத்தில், ரஜினி ஏதோ கூற, (மான்டேஜ் காட்சி) பதிலுக்கு அவர் ஒரு விதமாய் சிரித்துக்கொண்டே ஆமோதிப்பார். சான்ஸே இல்லைங்கய்யா.

* மேற்படி துப்பாக்கி சண்டை காட்சிகளை விட்டு விடலாம். ஆனால் அட்டகத்தி தினேஷ்-ஐ தலையில் கேப் கேப் விட்டு பாட்டில்களால் அடிப்பது, திக்திக் வன்முறை காட்சி.

* அப்பா என்று முழுதாய் கூறாமல் ‘ப்பா..’ ‘ ‘ப்பா..’ – என்று செல்லமாய் சிணுங்கும் யோகி. சென்னைக்கு கிளம்பும்போது, பின்னால் திரும்பி, தினேஷை பார்த்து மிக லேசாய் உதட்டை குவித்து, முத்த சைகையுடன் ‘பாய்..’ சொல்லும் யோகி.

* ரஜினியின் வசனங்கள், முந்தைய சில படங்களில் ஆங்காங்கே அட்வைஸ் கொடுப்பது போல் அமைந்திருக்கும். அந்த மாதிரி எதுவும் இல்லாதது.

* ரஞ்சித்தின் ஆண்டை-அடிமை அரசியல், சட்டை மற்றும் சாட்டையடி வசனங்கள். அவைகளை ரஜினி மூலமாய் பேச வைத்திருப்பது.

* மெட்ராஸ்காரன் பாத்திர படைப்பு. ரஜினிக்கு ஏமாற்றம் கொடுத்து விட்டோமே என்று, சுவரேறி குதித்து, ‘அம்மாவை பாத்துட்டேன்…சார்’ என்று வந்து நிற்பது.

* ரஜினி – ராதிகா ஆப்தே சந்திப்பில், படம் பார்த்த இரண்டாம் முறையிலும், கண்ணு வேர்த்தது. அந்த மெட்ராஸ்காரனும் கண்ணை துடைத்துக் கொள்வது நெகிழ்ச்சி.

* 1000 ரூபாய் கொடுத்து முதல் நாள் படம் பார்த்தவர்களுக்கு பிடிக்காத படம், 120 ரூபாய் கொடுத்து நான்காம் நாள் படம் பார்த்தவர்களுக்கு பிடித்திருந்தது. (இந்த கூற்று, குடியிருக்கும் தெருவின் ஐந்து குடும்பங்களின் நேரடி கள ஆய்வின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. “ஏங்க.. படம் நல்லா தானே இருக்கு… இதை போய் மொக்கைன்னு சொல்லிட்டாங்க..”. அவர்களின் கருத்து சுருக்கமாய், ‘படத்தில் கதை இருக்கிறது. பிரிந்த மகளை, மனைவியை தேடி போவதில் சுவாரசியம் இருக்கிறது. ரஜினியிடம் ஸ்டைல் இருக்கிறது. ரொம்ப நாளைக்கு அப்புறம் செமத்தியா நடிச்சு இருக்காரு…’)

* குழந்தைகளுக்கு இன்னமும் ரஜினியை / கபாலியை பிடிப்பது.

Preetham Krishna