ஆபத்தான பனிப்பொழிவில் 45 நாட்கள் படமாக்கப்பட்ட ‘சாலை’

முகிலன் சினிமாஸ், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘சாலை’. இப்படத்துக்கு ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். (இவர் ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.) இவர்களுடன் ’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர்.

‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டு முழுப்படத்தையும் படமாக்கியுள்ளனர். இது குறித்து இயக்குனர் சார்லஸ் கூறுகையில், “இதுவரை இந்திய திரைத்துறையினர் காஷ்மீரில் பெரும்பாலும் சாதாரண தட்பவெப்பம் இருக்கும் கால நிலைகளில் படப்பிடிப்பை நடத்திவிட்டு திரும்பி விடுவார்கள். அதுவும் ஒரு சில பகுதிகளையோ, காட்சிகளையோ படமாக்கிவிட்டு வந்துவிடுவார்கள்.

‘சாலை’ படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட படமாக்கி இராத ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவிற்கு இடையே 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டுதான் படமாக்க முடிந்தது. எங்கள் படக்குழுவே உயிரோடு திரும்புவோமா என்ற பெரும் பீதியுடனே அங்கிருந்த ஒவ்வொரு நாளும் கழிந்தது.

​வழக்கமாக அனைத்து படங்களும் பனியை அழகு காட்சிக்காகவே பயன்படுத்தி இருப்பர். ஆனால் ‘சாலை’ படத்தைப் பொருத்தவரை  ‘பனி’ என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட். படம் பார்க்கும்போது ஒட்டுமொத்த காஷ்மீரின் அழகை அனுபவிக்க முடிந்தாலும், ‘பனி’ என்ற பெரும் அரக்கன் உங்களை பயப்படுத்திக்கொண்டே இருப்பான்” என்கிறார்.

ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, வேத் சங்கர் இசையமைக்க, கலையை எஸ்.எஸ்.மூர்த்தியும், எடிட்டிங்கை பிரவீன் பாஸ்கரும் கையாண்டுள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.