வென்று வருவான் – விமர்சனம்

தூக்குமேடையில் நிறுத்தப்படும் அப்பாவி கிராமத்து இளைஞனின் கதை இது.

நாயகன் வீரபாரதியின் அம்மாவுக்கு கண் தெரியாது. வீரபாரதி சின்ன வயதில் இருக்கும்போது, அவரது அம்மா குளிப்பதை ஊர் தலைவர் ரகசியமாக பார்த்து ரசிப்பதை கண்டு, அவரை அடித்து உதைக்கிறார். இதை தனது அம்மாவிடம் வந்து வீரபாரதி கூற, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த ஊரில் சாமியாராக திரியும் ஒருவருடன் காட்டுக்குள் தலைமறைவாக அனுப்பி வைக்கிறார் அம்மா.

காட்டுக்குள் சென்று வளரும் வீரபாரதி, நாகரீகம் இல்லாமல் முரடனாக வளர்கிறார். இந்நிலையில், ஊர் தலைவரும், அவரது மகனும் சேர்ந்து ஊருக்குள் அட்டகாசம் செய்கிறார்கள். இதனை அறியும் வீரபாரதி அடிக்கடி காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்து அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, மிரட்டி விட்டுச் செல்கிறார்.

வீரபாரதி யாரையெல்லாம் மிரட்டிவிட்டு செல்கிறாரோ, அவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால், வீரபாரதிதான் அனைவரையும் கொன்றதாக எண்ணி, ஊர்மக்கள் அவரை போலீசில் ஒப்படைக்கிறார்கள்.

உண்மையில், அவர்களையெல்லாம் வீரபாரதிதான் கொலை செய்தாரா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி வேறு யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? ஜெயிலில் அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வீரபாரதியின் கதி என்ன? என்பது மீதிக்கதை.

நாயகன் வீரபாரதி முரடன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சமீராவும் கிராமத்துப் பெண்ணாக அழகாக இருக்கிறார். ஊர் தலைவராக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வீரபாரதியின் அம்மாவாக நடித்திருப்பவரும் கண் பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் காமெடிக்கு வையாபுரி, கிரேன் மனோகர் இருவரும் வருகிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் காமெடி என்ற பெயரில் செய்யும் கலாட்டாக்கள் எல்லாமே சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன.

படத்தின் இயக்குனர் விஜேந்திரன், கதாபாத்திரங்களை புதுமுகங்களாக தேர்வு செய்திருந்தாலும், அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் முழுமையடையாமலேயே சென்றிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், பிற்பாதியில் முன்பாதியில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. இயக்குனர், முதல்பாதியில் உள்ள காட்சிகளில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். மேலும், ஒரு சினிமா கதைக்கு தீய கதாபாத்திரங்கள் தேவை என்றால், தீவிரவாதம் பற்றிய புரிதல் எதுவும் இல்லாமல், அமெச்சூர்தனமாக தீவிரவாதிகளை கதைக்குள் கொண்டு வருகிற தமிழ்சினிமாவின் அபத்தம் இதிலும் தொடர்கிறது.

முரளி கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக, தூக்குக்கயிறு முன்னால் மகன் நிறுத்தப்பட்டிருக்கும்போது, கண் தெரியாத தாய் பாடும் உருக்கமான பாடல் கண்களில் நீரை வரவழைக்கிறது.

‘வென்று வருவான்’ –தாய் – மகன் பாசத்துக்காகவும்,  க்ளைமாக்சுக்காகவும் பார்க்கலாம்!.