இன்றைய அவலத்தையும், நாளைய பிரச்சனை யையும் சொல்லும் ‘வேலை இல்லா விவசாயி’

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தை இயக்கியவர் பி.வி.பிரசாத். இவர் பிரசாத் பிக்சர்ஸ் என்ற சொந்த பட நிறுவனம் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ வேலையில்லா விவசாயி. இதில் நாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வாகை சந்திரசேகர் நடிக்கிறார்.

விவசாயிகள் பிரச்சனையை வைத்து படம் எடுக்க முன்வந்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் பி.வி.பிரசாத் கூறுகையில், “எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். செய்யாறை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது. இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டன.

“எல்லாம் இருக்கிறது; சோறு தான் இல்லை’ என்கிற சோகம் அடுத்த தலைமுறை மக்களின் குரலாக ஒலிக்கப் போகிறது. ஐயோ, தவறு செய்து விட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியைப் போக்காது. எந்த விஞ்ஞானமும் பூமித்தாயைப் போல அரிசியையும், கோதுமையயும் விளைவிக்காது. பூமியை மலடாக்கிவிட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன்?

“ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம் அரிசியையும், பருப்பையும் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். செய்யாறில் பண்ணையாராகவும், விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச்மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச்மேனாகவும் பார்த்திருக்கிறேன். தன் நிலத்தை வாங்கியவர்கள் அதே ஏ.டி.எம்களில் வந்து கை நிறைய பணத்தை எடுக்கும்போது, அவர்களை ஏக்கமாக பார்க்கும் அவலத்தையும் பார்த்திருக்கிறேன்.

“இதையெல்லாம் தான் விவசாயியின் குரலாக இப்படத்தில் பதிவு செய்கிறோம். செய்யாறு, காஞ்சிபுரம், அதை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்” என்றார் இயக்குனர்..

ஒளிப்பதிவு – ராசாமதி, குணசேகரன்.கே

கலை – சகு

எடிட்டிங் -என்.கணேஷ்குமார், ராமர்.ஆர்

நடனம் – பாபி ஆண்டனி

ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர்

தயாரிப்பு மேற்பார்வை – மோகன், கணேஷ்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி