நடன கலைஞர் சாண்டி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பலசாலி’

திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் புகழ் பெற்றவர் சாண்டி. இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பலசாலி’.

இப்படத்தில் சாண்டிக்கு ஜோடியாக, ‘சண்டிக்குதிரை’ பட நாயகி மானஸா நடிக்கிறார். நாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடிக்கிறார். இவர்களுடன் சாம்ஸ், லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்த, வளரும் காமெடியன்கள் நடிக்கிறார்கள்.

வைஷாலி பிக்சர்ஸ் சார்பாக கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திக் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘ரீங்காரம்’, ‘கடலை போட பொண்ணு வேணும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

‘பலசாலி’ படம் பற்றி இயக்குனர் சிவகார்த்திக் கூறுகையில், “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது, புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ‘பலசாலி’.

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னைவிட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையோடு இதில் சொல்லுகிறோம். ‘சூது கவ்வும்’ பாணியிலான பிளாக் ஹியூமர் படமாக உருவாகிறது ‘பலசாலி’.

பொதுவாக, இதுமாதிரியான படங்களில் ஹீரோவை முற்பகுதியில் கோழையாகவும், பிற்பகுதியில் வீரனாக்குவது போலவும் கதை இருக்கும். ஆனால் ‘பலசாலி’ படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பான். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சண்டைகளாகத் தான் இருக்கும்.

முழுக்க முழுக்க சென்னையில் உருவாகும் ‘பலசாலி’ படம், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது” என்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.

ஒளிப்பதிவு – இ.என்.ஜே.ஹரீஷ்

இசை – சுதர்சன்

படத்தொகுப்பு – வில்சி