தேர்தல் ரத்து எதிரொலி: உள்ளாட்சி அமைப்புகளில் இனி சிறப்பு அதிகாரிகள் ஆட்சி!

தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்க, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கான அரசாணை இன்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 25ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டது. நகராட்சிகள் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 14 ஆயிரத்து 690 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நவம்பர் 2ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 26ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, அக்டோபர் 3ஆம் தேதி முடிந்தது. அக்டோபர் 4ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. அன்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை சரியாக நிர்ணயிக்கப்படாமல், அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாக, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தும், புதிய அறிவிக்கையை வெளியிட்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி முடிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தபோதும், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

இதனால் தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்தது. நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

வரும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைவதால், அவர்கள் பதவி விலக வேண்டும். தேர்தல் தள்ளிப்போவதால், புதியவர்கள் பதவியேற்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1996க்கு முன், உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தனி அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருந்தனர். அதே நடைமுறையை பின்பற்றி, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.